அர்த்தமுள்ள
இந்து மதத்தில் கவியரசு கண்ணதாசன் சொன்ன வரிகள்
பூர்வ ஜென்மத்தின்
தொடர்ச்சியாக இந்த ஜென்மத்தில் நாம் நன்மை தீமைகளை அனுபவிக்கிறோம் என்பது உண்மையா?”
“ஜென்மங்கள்
பற்றிய விஷயத்தில் கடவுளுக்குச் சம்பந்தம் என்ன?”
இந்தக் கேள்விகளுக்கெல்லாம்
என்னுடைய பதிலைக் கூறுமுன் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த
பராமாசாரிய சுவாமிகள் எழுதியுள்ள ஒரு சிறு நூலிலிருந்து விஷயங்களை வைக்கிறேன்.
“கடவுளை
நோக்கிச் செய்கின்ற பிரார்த்தனை அல்லது வேண்டுகோள் பலனுடையதாக இருக்குமா? அப்படி ஒரு கடவுள் இருக்கிறாரா? அப்படி இருப்பாரென்றால், நமக்கும் அவருக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்கின்றதாகத்
தெரிய வில்லையே! அவ்வித மூட நம்பிக்கை நமது நாட்டை விட்டுப் போனாலன்றி நம் நாடு
முன்னேற முடியாது” என்று
சொல்கின்ற பலர், ஆலய
வழிபாட்டிலும், வீட்டு
வழிபாட்டிலும் தலைசிறந்த நமது தமிழகத்திலேயே உற்பத்தியாகி இருக்கிறார்கள். இவை
வெளிநாடுகளிலிருந்து விதைத்த விதைகளால் ஏற்பட்டவை. இப்படிப்பட்ட கேள்விகளையும்
இதற்கு மேலதிகமான கேள்விகளையும் பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்பே கேட்டு, அவர்களுக்கெல்லாம் பல நியாயங்களும் நிரூபணங்களும் கொடுத்து
ஒத்துக்கொள்ளுமாறு நமது அருளாளர்களும் ரிஷிகளும் செய்து, அவற்றைப் பின் சந்ததியார்கள் யாவரும் உணர்ந்து கொள்ளுமாறு
ஏடுகளில் எழுதியும் உதவியிருக்கிறார்கள். அந்த உண்மைகளை நாம் திருவருளால்
கண்டுணர்ந்து இன்று வெற்றிமுரசு கொட்டிக் கையாண்டு வருகிறோம்.
அவ்வாறு கேட்கின்ற
ஒருவரிடம், நாம்
முதலாவதாக ஒரு கேள்வி கேட்கிறோம்: “நீ
இந்த உலகத்தில் பிறந்து, நன்றாக
உண்டு வளர்ந்து, இவ்வாறு
பேசுவதற்கு மூல காரணம் உன்னுடைய அப்பாவும் அம்மாவும்தான் என்பதை ஒப்புக்
கொள்கிறாயா?” என்பதே
அந்தக் கேள்வி. “ஆம்” என்று ஒப்புக் கொண்டால் மட்டும் மேற்கொண்டு பேசுவோம்.
மனிதனான எவனும் ஒப்புக்
கொள்ளாதிருக்க முடியாது. “உன்னை
உன்னுடைய அம்மா தானே பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்துப் பாலூட்டித் தாலாட்டி உணவு
கொடுத்து வளர்த்து வந்தாள்? அப்படியிருக்க
“நீ யாருடைய குழந்தை?” என்று கேட்டால், “நீ ஏன் அம்மாவின் பெயரைச் சொல்லாமல் அப்பாவின் பெயரைச்
சொல்லி,
அவருடைய மகன் என்று
சொல்கிறாயே” என்று
கேட்போம். உன்னைப் பெற்றெடுத்தது உனது தாயார் தான் என்பதே அவள் சொல்லத்தான்
தெரியுமே தவிர, நீ
அறியாதிருக்க, தகப்பனார்
பெயரை உன் தாயார் சொன்னதைக் கேட்டுத் தானே ஒப்புக் கொண்டு சொல்லி வருகிறாய்?” என்போம்.
“ஆம்” என்று சொல்லாமல் தீராது.
தாயாருக்கே தான் பெற்ற
பிள்ளையின் தகப்பனார் யார் என்று தெரியாத நிலையிலிருந்தால், தாயார் விலாசத்தைப் போட வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.
தாயார் பெயரை சொல்லாததும், தகப்பனார்
பெயரைச் சொல்லாததும் உலக முழுவதிலும் நடைபெறுவதாகும். அதற்கு மூல காரணம் ஒன்று
உண்டு. அதாவது, ஒரு
விளைநிலம் ஒருவனுக்குச் சொந்தமாக இருக்க, அதில் உழவு செய்து வித்திட்ட அவனுக்குத்தான் அந்த
நிலத்தில் விளைந்து வந்த பயிர் சொந்தமாகும். அதுபோல் மனைவி, கணவனுடைய உடைமை, வித்திட்டவனும் கணவன். ஆகவே, கணவனது உண்மையான மனைவியிடத்தில் உற்பத்தியான குழந்தைகள்
சொந்தத் தந்தையின் குழந்தைகளாகின்றன.
அதனாலேயே பெண்களெல்லாம்
கற்புடையவர்களாக இருக்க வேண்டுமென்பது உலக நீதி.
இரண்டாவது கேள்வி: “உனக்குக் கல்யாணமாகி விட்டதா?” என்பதாகும். “ஆம்” என்பான். “பிள்ளைகள்
இருக்கின்றனவா?” “ஆம், இருக்கின்றனர்!” “நீயும் உன் மனைவியும் விரும்பிய வண்ணம் குழந்தைகள்
பிறந்தனவா?” “இல்லவே
இல்லை”
என்பான்.
நேருஜிக்கு எவ்வளவோ வசதிகள்
இருந்தும் ஆண் குழந்தைகள் கிடையாது என்பதும், பல பெரிய பணக்காரர்களுக்கும், பதவியில் உள்ளவர்களுக்கும், சில வைத்திய நிபுணர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் குழந்தையே கிடையாது என்பதும், யாவரும் அறிந்த உண்மையாகும்.
அதற்கும் உண்மையான காரணம்
உண்டு. அது எந்த மனிதனும் தனது விருப்பம்போல் ஆண் மகவுக்குரிய வித்தையோ, பெண் மகவுக்குரிய வித்தையோ உற்பத்தி செய்து உண்டாக்கிக்
கொள்ள முடியாததேயாகும். அந்த வித்தை, எல்லாம்
வல்ல கடவுள் கொடுத்துத்தான் எந்தத் தந்தையும் பெறவேண்டியிருக்கிறது. கடவுள்
கொடுக்க தந்தை பெற்று, தாயார்
அதனைப் பெற்றதன் காரணத்தினாலேயே தாய் தந்தையரைப் `பெற்றவர்கள்’ அல்லது
`பெற்றோர்கள்’ என்று
சொல்லுகின்றோம்.
இந்த உண்மையை உணர்ந்த
அருளாளர்கள், தந்தை
இரண்டு மாதம் தங்குகின்ற நாற்றங்காலாகவும், தாயாரைப் பத்து மாதம் வளர்க்கின்ற விளைநிலமாகவும், இரண்டையும் உடையவர்கள் கடவுளே என்றும், அவற்றில் வித்திட்டவரும் கடவுளே என்றும் கண்டு, ஆண்டவனே உலகத்தில் பிறந்திருக்கிற எல்லா மனிதர்களுக்கும்
எல்லாப் பிறவிகளுக்கும் உண்மையான அம்மையப்பன் ஆகின்றான் என்றும்
அருளியிருக்கின்றார்கள்.
இந்துக்கள், கடவுளை `அம்மையே
அப்பா’
என்றும், `எந்தையாய் எம்பிரான்’ மற்றும் யாவருக்கும் `தந்தை தாய் தம்பிரான்’ என்றும்; கிறிஸ்தவர்கள்
`நாமெல்லாம் பரமண்டலத்திலிருக்கின்ற பிதாவினது குழந்தைகளே’ என்றும்; இஸ்லாமியர்கள்
`கடவுளே மனிதர்களைப் படைத்தார்’ என்றும் கூறி வருகிறார்கள். யாரும் உயிர்களைக் கடவுள்
படைத்ததாகச் சொல்லவில்லை.
மூன்றாவது கேள்வி: “உனக்கு ஒரு பெயரிடப் பெற்றிருக்கிறதல்லவா? அந்தப் பெயர் கண்ணுக்குத் தெரியாத உயிருக்கு இடப்பட்டதா? கண்ணுக்குத் தெரிகின்ற பாரமுள்ள உடலுக்கு இடப்பட்டதா? அல்லது வேறொரு பாரமில்லாத உன் உடலுக்கு இடப்பட்டதா?” என்று கேட்போம். “நான் பிறந்த பின்தான் பெயரிட்டிருக்கிறார்கள்; ஆணா பெண்ணா என்று பார்த்து என் பெற்றோர்கள்தான்
பெயரிட்டிருக்கிறார்கள்” என்றுதான்
(நாம் எழுதியிருக்கிற புத்தகத்தைப் படித்தறியாத) எவரும் சொல்வர்.
ஆனால் உண்மையில் மனிதராகப்
பிறந்திருக்கிற எவருக்கும் பெயரிட்டவர் கடவுளேயாவார். ஒருவரை ஆணாகவோ பெண்ணாகவோ
பிறக்கச் செய்ய வேண்டிய தகப்பனாருடைய உடலில், அதற்குரிய அணுப்பிரமாணமுள்ள அதிசூக்குமமான வித்தைச்
செலுத்தி, முன்னரேயே
அவருடைய வினைகளுக்குத் தகுந்த தலையெழுத்தை ஆணுக்கு வலது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு இடது உள்ளங்கையிலும் சுருக்கெழுத்துப் போன்ற
ரேகைகளாகப் பொறித்து, இன்ன
ஊரில்,
இன்ன ஜாதியில், இன்ன பெற்றோருக்கு இன்ன பெயரோடு, இன்ன விநாடியில் இன்னின்ன கிரக நிலையில் பிறக்க
வேண்டுமென்று கடவுளே தீர்மானித்து, அதன்படி
பிறக்கச் செய்து அவர் இட்ட பெயரையே இடும்படியாகவும், அவரவர் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப இன்ன இன்ன இன்பம்
துன்பம் அனுபவித்து வருமாறும் ஆட்சி புரிந்து வருகிறார். அந்தப் பெயரும்
சொப்பனத்தில் பாரமுள்ள உடலின் உதவியின்றி, இன்பம் துன்பம் அனுபவிக்கின்ற, பாரமில்லாத உள்ளுடலுக்கே இட்டிருக்கிறார்.
இந்த அரிய பெரிய பேருண்மையை
முதன் முறையாகக் கேட்கின்ற அனைவரும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. ஒருவேளை, நமக்கு மூளைக்கோளாறாக இருக்கலாமோ என்றுகூடச் சில
ஆத்திரக்காரர்கள் நினைக்கக்கூடும். நாம் இதனுடைய உண்மையைச் சோதித்து உணருவதற்காக
ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்த பின் இவ்விதம் கூறுகின்றோம்.
திருவள்ளுவர்:
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்றும்,
மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்றும்,
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
என்றும் கூறியிருப்பதனால், நாம் கூறும் இந்த உண்மையைச் சோதித்துப் பார்த்தபின், அதைப்பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமே தவிர, கேட்டமாத்திரத்தில் யாரும் எதையும் மறுத்தால் அது
அறிவுடைமையாகாது.
பெயர்களைக் குறித்து
கிறிஸ்துவ வேதநூலில் பிரசங்கி ஆகமம், அதிகாரம்
6,
வசனம் 10ல் “இருக்கிறவன்
எவனும் தோன்று முன்னமே பெயரிடப் பெற்றிருக்கிறான். அவன் மனுஷன் என்பது
தெரிந்திருக்கிறது” என்றும், ரேகை, சாஸ்திரத்தைக்
குறித்து யோபு ஆகமம், அதிகாரம்
37,
வசனம் 7ல் “தாம்
உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படி, அவர் சகல மனுஷருடைய கையையும் முத்தரித்துப் போடுகிறார்” என்றும் கூறியிருக்கிறது.
உதாரணமாக நாகர்கோவில் ஸ்ரீ
ஆறுமுக நாவலரது நாடி சாஸ்திர ஏட்டில், அவருடைய
பெயரை `ஐந்தும் ஒன்றும் வதனமெனப் பெயரும் சூட்டி’ என்று கண்டிருந்தது. ஐந்து + ஒன்று ஆறு; வதனம் என்றால் முகம்; ஆறுமுகம் என்பது ஆண்டவன் இட்ட பெயர்.
ஸ்ரீ வைகுண்டத்திலுள்ள ஒரு
கத்தோலிக்கக் கிறிஸ்துவ அன்பருக்கு, `சாவில்
ஆறும் சாவில் ஒன்பதும் இவன் தன் நாமம்’ என்று கண்டிருந்தது. `ச’ என்ற
எழுத்து வரிசையில் ஆறாவது எழுத்து `சூ’ ஒன்பதாவது எழுத்து `சை’ அவரது
தந்தை இட்ட பெயரும் `சூசை’ என்பதாகும். ஆண்டவன் கொடுத்த பெயரும் `சூசை’ என்பதாகும்.
ஓர் இந்துவைப்போல் மாறுவேஷம் போட்டுக் கொண்டு சென்ற, மதுரையிலுள்ள இஸ்லாமியருக்கு `அப்துல் ரஹ்மான்’ என்ற பெயர் கூறப் பெற்றிருக்கிறது. ஓர் ஆங்கிலேயர்
பார்த்தபொழுது, `முழத்தில்
பாதி இவன் தன் நாமம்’ என்றிருந்தது.
அவரது பெயர் `ஜான்’ என்பதாகும். கோவையில் கௌமார மடத்தை நிறுவிய தலைவருக்கு `இராமக் குட்டி’ என்றும், பின்
துறவு பூண்டு `ராமானந்தர்’ ஆவார் என்றும் கண்டிருந்தது. இவற்றின் உண்மைகளை, சென்னை அரசாங்கத்தார் கைரேகைகள் சம்பந்தமாக, `சப்தரிஷி நாடி’யின் பழைய ஏட்டுப் பிரதிகளிலிருந்து பல புத்தகங்களை
வெளியிட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கந்தர் நாடி, காக்கையார் நாடி, கௌசிகர் நாடி, சீவக
சிந்தாமணி, அநாகத
வேதம் முதலிய பிற ரேகை சாஸ்திரங்களும் இருக்கின்றன. கடவுள் கொடுத்திருக்கும்
அவ்விதத் தீர்ப்புகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருப்பதற்குக் காரணம், அவரவர் சுயஅறிவு கொண்டு முன் பிறவிகளில் செய்த நல்வினை
தீவினைகளில் ஏற்பட்ட வேற்றுமைகளே தவிர, கடவுளது பட்சபாதமுள்ள செயலால் அல்ல என்பதற்குரிய
நிரூபணங்களும், ரேகை
சாஸ்திர ஏடுகளில் காணப்பெறுகின்றன. கடவுள் கொடுக்கிற நியாயத் தீர்ப்பில் தவறு
ஏதும் இருக்க முடியாது.”
மதுரை ஆதீன கர்த்தர்
மேற்கூறிய கருத்துப்படி நம்முடைய பிறப்பும், நமக்குப் பெயரிடப்படுவதும், நமது வளர்ப்பும், முற்பிறவியும், மறுபிறவியும் ஆக எல்லாமுமே இறைவன் கையில் தான்
இருக்கின்றன.
“ஆட்டுவித்தால்
யாரொருவர் ஆடாதாரே” என்றும்
முன்னோர்கள் சொல்லிச் சென்றார்கள்.
“முன்னர் நமதிச்சையில் பிறந்தோமில்லை.
முதல்இடை கடைநமது வசத்திலில்லை.”
முதல்இடை கடைநமது வசத்திலில்லை.”
என்றான் மகாகவி பாரதி.
எந்தத் தாயின் வயிற்றில், எந்த நேரம் நாம் பிறக்கிறோம் என்பதையும், நமக்கு என்ன பெயர் சூட்டப்படும் என்பதையும் இறைவன்
குறிக்கிறான்.
பின்னாளில், நாம் வைத்துக் கொள்கிற புனைபெயரைக்கூட இறைவனே
குறித்திருக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன்.
உதாரணமாக,
என் பெற்றோர் எனக்கிட்ட
பெயர் முத்தையா. இது வைத்தீசுவரன் கோயில் சுவாமியின் பெயர். அந்த சுவாமி எங்கள்
குலதெய்வம்.
என் சகோதரருக்கு மறுபெயர்
முத்துக்குமரன்.
என் பெயரை மாற்றி ஒரு
புனைபெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியபோது `கண்ணதாசன்’ என்ற
பெயர் எனக்கேன் தோன்றிற்று?
அப்போது பாரதிதாசன், சக்திதாசன், கம்பதாசன்
என்றெல்லாம் பலர் இருந்ததால் அதுமாதிரி ஒரு பெயரை வைத்துக்கொள்ள விரும்பினேன்.
உண்மைதான்.
காலங்களால் அந்தப் பெயர்
எவ்வளவு பொருத்தமாகி விட்டது.
கண்ணனும் தன் பெற்றோருக்கு
எட்டாவது குழந்தை!
நானும் எட்டாவது குழந்தை.
கண்ணனை வணங்கத் தொடங்கிய
நாளில் இருந்து எனக்கு அமைதியும் ஞானமும் வரத் தொடங்கின.
சரியாகத் தேடிப் பார்த்தால்
ஏதாவது ஒரு நாடி சாஸ்திரத்தில் இதை நான் காணக்கூடும்.
பூர்வ ஜென்மத்தில் நான்
யாராக இருந்தேன் என்பதும் தெரியக்கூடும்.
நாடி சாஸ்திரம் அதையும்
சொல்கிறது என்கிறார் ஆதீனகர்த்தர்.
உதாரணமாக,
“எகிப்து
தேசத்தில் முன் பிறவியில் மன்னராக இருந்த ஒருவரே, இன்று திருநெல்வேலி ஜில்லாவில் சிங்கப்பட்டி ஜமீன்தாராகப்
பிறந்திருக்கிறார்” என்று
`அநாகத வேதம்’ என்ற
நாடி சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.
அதில், முன் செய்த தீவினை இன்னதென்றும், அதற்குரிய பரிகாரம் இன்னதென்றும் குறிப்பிடப் பெற்று
அந்தப் பரிகாரம் செய்தபின் அவருடைய வியாதி பூரணமாகக் குணமாகி விட்டதாம்.
“ஒவ்வொரு
உயிரும் மறுபிறப்பெடுத்து நன்மை தீமைகளை அனுபவிக்கிறது” என்னும் இந்துக்கள் நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.
`பதவீம்
பூர்வ புண்ணியானாம்’ என்பது
வடமொழி சுலோகம்.
`மேலைத்
தவத்தளவே யாகுமாம் தான்பெற்ற செல்வம்’ என்பதும்
தமிழ் மூதுரை.
முற்பிறப்பின் கருமவினைகள்
அடுத்த பிறப்பிலும் தொடர்கின்றன.
அலகாபாத்தில் செல்வந்தர்
மகனாகப் பிறந்தவர் பரத கண்டத்தில் பிரதம மந்திரியானதும், சேரிவாழ் மக்களிடையே பிறந்தவர் பாதுகாப்பு மந்திரியானதும், மராட்டியக் குடிமகன் ஒருவர் நிதி மந்திரியானதும், காஞ்சியிலும், திருவாரூரிலும்
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்கள் முதல் மந்திரிகளானதும் அவர்களுடைய
திறமையினாலா? முயற்சியினாலா?
எட்டாம் வகுப்பை எட்டிப்
பார்க்காத ஓர் ஏழை, தமிழகத்தின்
தலைவனாகி, ஆயிரம்
பள்ளிக்கூடங்கள் கட்டி நூற்றுக்குத் தொண்ணூறு பேரைப் படிக்க வைத்தது எப்படி
முடிந்தது?
“இட்டமுடன் என் தலையில் இன்னபடி
என்றெழுதி விட்ட சிவன்.”
என்றெழுதி விட்ட சிவன்.”
என்றொரு பாடல் சொல்கிறதே, அதன் பொருள் என்ன?
ஒவ்வொரு உயிரின் வாழ்வும்
தாழ்வும், வறுமையும்
வளமும்,
நோயும் சுகமும், இறப்பும் மறுபிறப்பும் ஆண்டவனின் இயக்கமே என்பதைத் தவிர
வேறென்ன?
முற்றி முதிர்ந்த ஞானம்
இவற்றை அடையாளம் கண்டு கொள்கிறது.
முயற்சியால் ஆகக்கூடிய
திருவும், தெய்வத்தின்
இயக்கத்தால் கிடைப்பதே.
ஆண்டவனின் தீர்ப்புக்கு
யாரும் தப்பமுடியாது.
ஒரு தலைவருக்குப்
புற்றுநோய் வந்தபோது “நாத்திகம்
பேசியதால் வந்தது” என்றார்கள்.
ஆத்திகம் பேசிய ரமணரிஷிக்கு
ஏன் வந்தது?
சிலருக்குப் பொடி போட்டதால்
வந்தது என்றார்கள்.
பொடி போடாதவர்களுக்கு ஏன்
வந்தது?
`புகையிலை
உபயோகிப்பதால் வருகிறது’ என்கிறார்கள்
மருத்துவர்கள்.
அதை உபயோகிக்காதவர்களுக்கு
ஏன் வருகிறது?
ஆத்திகராக இருந்ததால், ஒருவர் நீண்டநாள் வாழ்ந்ததாகக் கூறுகிறார்கள்.
நாத்திகர்களும் நீண்ட
நாட்கள் வாழ என்ன காரணம்?
அளவோடு சாப்பிடுகிறவர்கள்
அதிக நாள் வாழலாம் என்கிறார்கள்.
அளவின்றிச் சாப்பிடுவோரும்
வாழ்வதற்கு என்ன காரணம்?
இன்பத்தையோ துன்பத்தையோ
தெய்வம்தான் வழங்குகிறது என்பதைத் தவிர வேறு என்ன காரணம்?
எந்தக் கணக்கைக் கொண்டு
தெய்வம் வழங்குகிறது?
ஒவ்வொரு பிறவியின் கணக்கைக்
கொண்டும் அடுத்த பிறவியை நிர்ணயிக்கிறது.
நூறாண்டுகள் வாழ்வது எப்படி
என்ற நூலை எழுதியவர், அறுபது
ஆண்டிலேயே காலமானதை நான் பார்த்திருக்கிறேன்.
ஆகவே, நமது கண்ணுக்குத் தெரியாத சூட்சும இயக்கம் என்று ஒன்று
நடந்து கொண்டிருக்கிறது.
நாம் பிறந்துள்ள இந்தப்
பிறப்பில் நடந்து கொள்கிற முறையை வைத்து, அதற்குரிய பரிசையோ தண்டனையையோ இந்தப் பிறப்பில் பாதியையும், அடுத்த பிறப்பில் பாதியையும் அனுபவிக்கின்றோம்.
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமையும் ஏமாப் புடைத்து”
எழுமையும் ஏமாப் புடைத்து”
என்றான் வள்ளுவன்.
ஆகவே பிறவிகள் ஏழு என்பதை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, நம்மவர்கள்
ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த பிறப்பு என்பது
நம்முடைய ஆசையின்படியே விளைய இறைவன் அனுமதிப்பானானால், அடுத்த பிறவியில் நான் ஒரு நாயாகப் பிறந்து, இந்தப் பிறவியில் என்னிடம் நன்றியோடு நடந்தவர்களுக்கெல்லாம், அந்த நன்றியைத் திருப்பிச் செலுத்த விரும்புகிறேன

தங்கள் பதிவுகள் தொடர இறையை வேண்டுகிறேன்!
ReplyDeleteclears many doubts
ReplyDeletevery good information.
ReplyDelete